பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, இரண்டு இளம் பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர்களை தனியாக அழைத்து விசாரித்தனர்.
அவர்களது கைப்பையைத் திறந்து பார்த்தபோது, அதில் 40க்கும் மேற்பட்ட சோப்புகள் இருந்தன. அந்த சோப்புகளை பிரித்துப் பார்த்தபோது, அவற்றின் உள்ளே போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அது 14.65 கிலோ கோகைன் போதைப்பொருள் என அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு
ரூ.14.69 கோடி என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இரண்டு இளம் பெண்களையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மணிப்பூரை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் மிசோரத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை இரண்டு இளம் பெண்கள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.