அண்ணன் தம்பி 5 பேர்.. அதில் நால்வர் மாவோயிஸ்ட்.. நேற்றைய என்கவுண்டரில் ஒருவர் பலி..

Siva

வியாழன், 19 ஜூன் 2025 (09:38 IST)
ஆந்திரப் பிரதேசத்தின் தேவிபட்டினம் வனப்பகுதியில், போலீஸ் படையினரால் மாவோயிஸ்ட் தலைவர் கஜர்லா ரவி சுட்டுக்கொல்லப்பட்டார் . 'உதய்' என்றும் அறியப்படும் இவரது ஐந்து சகோதரர்களில் நால்வர் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கஜர்லா ரவி, தனது சகோதரர்களிலேயே கடைசியாக இயங்கி வந்த மாவோயிஸ்ட் தலைவர் ஆவார். ஆனால், நேற்று அவர் என்கவுண்டர் செய்யப்பட்டதால் அவரது சகாப்தம் முடிவுக்கு வந்தது.
 
ரவியின் சகோதரரான கஜர்லா சாரையா 17 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008 ஏப்ரல் மாதம் இதேபோன்று என்கவுன்டரில் கொல்லப்பட்டார். மற்றொரு சகோதரர் உடல்நல குறைவால் சரணடைந்தார். மீதமிருந்த மற்றொரு சகோதரரும் மாவோயிஸ்டாக மறைந்து வாழ்ந்தபோது உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
 
ஆந்திரப் பிரதேசம்-ஒடிசா எல்லையோரப் பகுதிகளில் மிகவும் மூத்த மாவோயிஸ்ட் தலைவராக கருதப்பட்ட கஜர்லா ரவி, தெலங்கானாவின் ஜெய்சங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2003-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக படுகொலைத் திட்டம் தீட்டியதாக பாதுகாப்புப் படைகள் ரவி மீது குற்றம் சாட்டியிருந்தன.
 
ஆந்திரப் பிரதேசக் காவல்துறை தகவலின்படி, நேற்று அதிகாலை அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில், மாரேடுமில்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவிபட்டினம் வனப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.
 
இந்த என்கவுன்டரில், ரவியுடன், மூத்த AOBSZC உறுப்பினர்களான ராவ் வெங்கட சைதன்யா மற்றும் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மத்தியக் குழு உறுப்பினர் சலபதியின் மனைவி, மற்றும் AOBSZC-யின் பகுதிக்குழு உறுப்பினர் அஞ்சு ஆகியோரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்