ஒடிசா ரத யாத்திரை நெரிசலில் சிக்கி மூவர் பலி; ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் விபரீதம்..!

Siva

ஞாயிறு, 29 ஜூன் 2025 (09:28 IST)
ஒடிசாவின் பூரி நகரில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற ரத யாத்திரையின்போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது மூன்று பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். அதிகாலை 4 மணியளவில் ஜெகந்நாதரின் நந்திகோஷ் ரதம் கோயிலை அடைந்தபோது, இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தடுப்புகள் சரிந்து, ரதத்தின் சக்கரங்களுக்கு அருகே பல பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மீது விழுந்தனர்.
 
ஒடிசா சட்ட அமைச்சர் பிருதிவிராஜ் ஹரிசந்தன் இந்த சம்பவத்திற்கு தனது இரங்கலை தெரிவித்ததுடன், உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். "மூன்று உயிர்களை பலிகொண்ட இந்த துயர சம்பவம் எங்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. முழுமையான விசாரணை நடத்தப்படும், மேலும் அலட்சியத்தால் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.
 
இதுகுறித்து கோவில் நிர்வாகம் கூறியபோது, இரண்டு நாள் ரத யாத்திரை கொண்டாட்டங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். யாத்திரையின் முதல் நாளான வெள்ளிக்கிழமை அன்று 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றதால், அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அன்று மாலை நிலவரப்படி, தேவி சுபத்ராவின் ரதம் அருகே சுமார் 625 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.
 
நேற்று வழக்கத்தை விட 20% கூட்டம் குறைந்திருந்த போதிலும், பல பக்தர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 650-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், குறைந்தது 70 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் ரத யாத்திரையின்போது அதிகளவிலான கூட்டத்தை கையாள்வதற்கும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், நகரம் முழுவதும் கிட்டத்தட்ட 10,000 போலீஸ் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்