ரெயில் பட்ஜெட்டில் பயணிகளுக்கான ரெயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-2018ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாரளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதை மத்திய பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டையும் ஒருங்கிணைந்து தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் பயணிகளுக்கான ரெயில் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு மறைமுகமாக இருந்த ரெயில் கட்டண உயர்வு, இந்த முறை நேரடியாக இருக்கும் என்று ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த முறை தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், சரக்கு கட்டண உயர்வு அதிகமாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரெயில்வே துறையின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிறது என்றனர்.
மேலும் பயணிகள் ரெயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்று கூறப்படுகிறது.