அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாக முன்னர் கூறி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று தான் கூறியதும், உடனே போர் நின்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தியா தரப்போ, போரை நிறுத்துவதற்கு பாகிஸ்தானின் வேண்டுகோள்தான் காரணம் என்றும், மூன்றாவது நாட்டின் தலையீட்டால் போர் நிறுத்தப்படவில்லை என்றும் உறுதியாகக் கூறியது. கிட்டத்தட்ட 10 முறைக்கு மேல் "நான் தான் போரை நிறுத்தினேன்" என்று ட்ரம்ப் கூறிவந்த நிலையில், அதன் பின்னர் கடைசியாக, "நான் போரை நிறுத்தவில்லை" என்று ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில், தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போரையும் தான் நிறுத்திவிட்டதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், ஈரான் தரப்பு, "நாங்கள் போரை இன்னும் நிறுத்தவில்லை" என்றும், "இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும்" என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் விஷயத்திலேயே உண்மைக்கு புறம்பான தகவலை சொல்லி திருந்தாத ட்ரம்ப், மீண்டும் ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்திவிட்டதாக தனக்குத்தானே கூறிக் கொண்டது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. \
இந்த நிலையில் டிரம்ப் அறிவிப்பால் ஏற்பட்ட ஒரே நன்மையாக, ஈரான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் கூறியதால், மீண்டும் கச்சா எண்ணெயின் விலை சரிய தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.