சிந்து நதிநீரை திறந்துவிடாவிட்டால் இந்தியாவுடன் போர்: பிலாவல் பூட்டோ ஆவேசம்..!

Siva

செவ்வாய், 24 ஜூன் 2025 (08:12 IST)
பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த சிந்து நதிநீரை இந்தியா நிறுத்திவிட்ட நிலையில், அந்த நீரை தற்போது ராஜஸ்தானுக்கு திருப்பிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த செயலால், சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டதால் பாகிஸ்தானில் விவசாயம் மற்றும் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீருக்குக்கூட பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நேற்று பேசிய பிலாவல் பூட்டோ "சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. இந்தியாவுக்கு உள்ளது இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான். ஒன்று, சிந்து நதிகள் பாகிஸ்தானுக்கு உரிய நீரை வழங்க வேண்டும். அல்லது சிந்து நதி படுகைகளில் உள்ள ஆறு நதிகளில் உள்ள நீரை பாகிஸ்தான் தானாகவே எடுத்துக்கொள்ளும்," என்று ஆவேசமாக பேசினார்.
 
மேலும், "இந்தியா சிந்து நதிநீரை முறையாகத் திறந்துவிட வேண்டும். இல்லையென்றால், நாம் இந்தியா மீது போர் தொடுப்போம்," என்றும் அவர் கடுமையாக எச்சரித்தார். இந்தியா தனது அரசியல் காரணங்களுக்காக தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாகவும், பாகிஸ்தானை எப்படியாவது சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பின் கருப்பு பட்டியலில் சேர்த்துவிட வேண்டும் என்று நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
 
பிலாவல் பூட்டோவின் இந்தப் பேச்சுக்கு இந்தியா விரைவில் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்