படுக்கைக் கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த குழந்தை! ஆந்திராவில் தொடரும் சோகம்!

புதன், 28 ஏப்ரல் 2021 (11:39 IST)
ஆந்திராவில் கொரோனா தொற்று ஏற்பட்ட குழந்தைக்கு சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயது குழந்தை ஜான்விதாவுக்கு ஒருவாரமாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தையை கே.ஜி.எச். அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்ற நிலையில் அங்கு குழந்தைக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைக் கிடைக்கவில்லை. ஏற்கனவே எல்லா படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வெளியிலேயே குழந்தையின் பெற்றோர் இரண்டு மணிநேரமாக காத்திருந்துள்ளனர். ஆனால் படுக்கைக் கிடைக்கும் முன்னதாகவே குழந்தை ஆம்புலன்சிலேயே உயிரிழந்துள்ளது.

இதனால் மருத்துவமனை வாசல் முன்பாகவே குழந்தையின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவமானது சமூகவலைதளங்களில் வெளியாகி அனைவர் மனதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்