சேலம் பகுதியில் திருமணமான 10 நாட்களில் தனது மனைவி இரண்டு மாத கர்ப்பம் என்பதை அறிந்து கணவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம், அதன் தொடர்ச்சியாக நடந்த மிரட்டிப் பணம் பறிப்பு கும்பலின் செயல் எனப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும், ஒரு இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி பத்தே நாட்களில் அந்த இளம் பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, அவர் இரண்டு மாத கர்ப்பம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை கேட்டு அவரது கணவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
அதன் பின்னர், அந்த இளம் பெண் தனக்கும், ஒரு இன்சூரன்ஸ் அதிகாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், அதில் தான் கர்ப்பமானதாகவும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து, கணவரின் சம்மதத்துடன் அந்த பெண் தனது கர்ப்பத்தை கலைத்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கர்ப்பத்தை கலைக்கச் செலவான பணத்தை தர வேண்டும் என்று அந்த இன்சூரன்ஸ் அதிகாரியை போய் மிரட்ட கணவர் முடிவு செய்துள்ளார். அவருடன் அவருடைய நண்பர் ஒருவரும் சென்று இன்சூரன்ஸ் அதிகாரியை மிரட்டியுள்ளனர். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அந்த இன்சூரன்ஸ் அதிகாரி 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து சமாளித்துள்ளார்.
ஆனால், கணவருடன் சென்ற அந்த நண்பர், தனியாக இன்சூரன்ஸ் அதிகாரியை அணுகி மிரட்டி, 9 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர், மீண்டும் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு அந்த நண்பர் மிரட்ட தொடங்கியுள்ளார். இதனால் பொறுமையிழந்த இன்சூரன்ஸ் அதிகாரி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.