ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த நடிகை சௌந்தர்யாவை மோகன்பாபுதான் கொன்றதாக ஒருவர் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
90களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை சௌந்தர்யா. தமிழில் அருணாச்சலம், சொக்கத்தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர், தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களில் நடித்திருந்தார்.
2004ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகை சௌந்தர்யா பெங்களூரில் இருந்து கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது, ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யாவும், அவரது சகோதரரும் பலியாகினர்.
அவர் இறந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது சத்யநாராயணபுரம் என்ற பகுதியில் வசிக்கும் எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் மோகன்பாபு, சௌந்தர்யாவின் ஆறு ஏக்கர் நிலத்தை தனக்கு எழுதிக் கொடுக்குமாறு கேட்டதாகவும், அதற்கு சௌந்தர்யாவின் சகோதரர் மறுத்ததாகவும், அதனால் சௌந்தர்யாவையும், அவரது சகோதரர் அமர்நாத்தையும், நடிகர் மோகன்பாபு கொலை செய்து, ஹெலிகாப்டர் விபத்து போல ஜோடித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் சௌந்தர்யாவுக்கு சொந்தமான அந்த நிலத்தை ஆக்கிரமித்து அவர் தனது மாளிகையை கட்டியுள்ளதாகவும், அதை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சௌந்தர்யாவின் கணவர் ரகு “மறைந்த என் மனைவியிடம் இருந்து சட்டத்திற்கு புறம்பாக எந்தவொரு சொத்தையும் மோகன்பாபு வாங்கவில்லை. மோகன்பாபு குடும்பத்துடன் 25 வருடங்களாக நல்லதொரு உறவை பகிர்ந்து வருகிறோம்” என அவர் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K