பெங்களூருவை சேர்ந்த ராதா மணி என்ற பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பின்னர் அவர் மனச்சோர்வுடன் இருந்ததாகவும், மேலும் அவரது கணவர் குடிகாரர் என்பதால் வீட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, குளியலறைக்கு சென்று தனது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதவர் போல் படுத்துக் கொண்டதாக தெரிகிறது.
மறுநாள் காலை குடும்பத்தினர் எழுந்து குளியல் தொட்டியில் குழந்தை சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரித்தபோது ராதா மீதுதான் சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் அவரிடம் விசாரணை செய்தபோது, தனது குழந்தையை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். கணவர் குடிகாரர் என்பதால் தனக்கு நிதி நெருக்கடி இருந்ததாகவும், பிரசவத்துக்கு பின்னர் மனச்சோர்வு இருந்ததாகவும், "இதற்கெல்லாம் இந்த குழந்தைதான் காரணம்" என்று நினைத்துதான் குழந்தையை கொன்றுவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.