பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டாலும், இந்தியாவின் பொருளாதாரத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும், இந்தியா பாதுகாப்பாக இருக்குமென உலகப் புகழ்பெற்ற மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் பொருளாதார நிலைமை படுமோசமாகிவிடும் என மூடிஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள மூடிஸ் நிறுவனம் என்பது ஒரு முக்கியமான கடன் தரநிலை மதிப்பீட்டு நிறுவனம். இது பல நாடுகளின் நிதி நிலை, பணப்புழக்கம், அரசியல் சூழ்நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, கணிப்புகள் மற்றும் மதிப்பீடுகளை வெளியிட்டு வருகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் பெரிதாக பொருளாதார தொடர்பு இல்லை. இந்தியாவின் ஏற்றுமதியில் பாகிஸ்தானின் பங்கு 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே, பாக்-இந்தியா இடையிலான பதற்றம், இந்தியாவின் வர்த்தகத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் பெரிய தாக்கம் ஏற்படுத்தாது.
பாதுகாப்பு செலவுகள் அதிகரித்தால் சில நிதி அழுத்தங்கள் வரலாம். ஆனால் அது மிக குறைவான அளவிலேயே இருக்கும். ஆனால், பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்படும். அந்நாட்டின் நாணய கையிருப்பு மற்றும் பொருளாதார நம்பகத்தன்மை குறையும் என மூடிஸ் தெரிவித்துள்ளது.