காங்கிரஸுக்காக சபதத்தை உடைத்த கபில் சிபல்....

வெள்ளி, 18 மே 2018 (14:06 IST)
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை நீதிமன்றத்திற்கு வர மாட்டேன் எனக் கூறிய வழக்கறிஞர் கபில் சிபில் இன்று கர்நாடக பிரச்சனைக்காக நீதிமன்றம் வந்து வாதிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆட்சி அமைக்க காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும், பாஜக எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் இருப்பதால், குதிரை பேரம் நடத்த வாய்ப்பிருப்பதாக கருத்து நிலவியது.
 
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று வழக்கு நடைபெற்ற போது மூத்த வழக்கறிஞர் கபல் சிபில் காங்கிரஸ்-மஜக கட்சிக்கு ஆதரவாகவும், பாஜகவிற்கு எதிராகவும் வாதிட்டார். 
 
கபில் சிபில் இந்த வழக்கில் ஆஜராகியது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை அல்லது பணி ஓய்வு பெறும்வரை உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டேன் என அவர் அறிவித்திருந்தார். ஆனால், கர்நாடகாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால், அவர் தனது சபதத்தை உடைத்து, காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கி வாதிட்டார். நாளை வாக்கெடுப்பு நடைபெற இவரின் வாதம் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்