இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்று செயல்பட்டு வரும் நரேந்திரமோடி, இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையில் தான் கால்பதிக்காத ஒரு நாட்டிற்கு பயணிக்கிறார்.
கடந்த 2014 முதலாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வென்று வரும் நிலையில் தொடர்ந்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து வருகிறார். 3 முறை தொடர்ந்து பிரதமராக இருந்து வரும் நரேந்திர மோடி, இந்த காலக்கட்டத்தில் உலகின் பல நாடுகளுக்கும் பயணித்து அந்நாட்டு அதிபர்கள், பிரதமர்களை சந்தித்து இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தியுள்ளார்.
அவ்வாறாக தற்போது விரைவில் ஜி7 மாநாட்டிற்காக கனடா செல்லும் பிரதமர் மோடி, முதல்முறையாக தான் கால்பதிக்காத ஒரு நாட்டிற்கு செல்கிறார்.
முதலில் இன்று டெல்லியில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி மத்திய தரைக்கடலில் உள்ள தீவு நாடான சைப்ரஸ் நாட்டிற்கு செல்கிறார். அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார். அங்கிருந்து புறப்பட்ட்டு 17ம் தேதி கனடா செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்கிறார். ஜி 7 உச்சி மாநாட்டில் தொடர்ந்து 6வது முறையாக பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
கனடாவில் உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு மறுநாள் 18ம் தேதியே அங்கிருந்து புறப்படும் பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடான குரோஷியாவிற்கு செல்கிறார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளன்கோவிச், அதிபர் ஜோரன் மிலனோவிச் உள்ளிட்டவர்களோடு இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
இந்திய பிரதமர் ஒருவர் க்ரோஷியா நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறையாகும், பிரதமர் மோடி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கும் பயணித்து அவர்களுடனான உறவை வலுப்படுத்தி வரும் நிலையில், அவரது முதல் குரோஷியா பயணம் ஐரோப்பிய - இந்திய உறவில் நல்ல விளைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K