அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்துக்குள்ளான நிலையில், விமானத்தில் இருந்த 241 பேர் மட்டுமின்றி, விமானம் விழுந்த இடத்தில் உள்ள மருத்துவ கல்லூரியிலும் ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி, மேலும் சிலர் உயிரிழந்திருப்பதாகவும், சிலரை காணவில்லை என்றும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், மருத்துவக் கல்லூரி கேண்டினில் வேலை செய்யும் தனது தாயையும், அவருடன் இருந்த தனது மகளையும் காணவில்லை என்றும், அவர்களைத் தேடி வருகிறேன் என்றும் ஒரு இளைஞர் கண்ணீருடன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"நேற்று வழக்கம்போல் நாங்கள் கேண்டினில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம். மருத்துவமனை ஊழியர்களுக்கு உணவு கொடுக்க நான் சென்றபோது, திரும்பி வந்து பார்த்தபோதுதான் கட்டிடத்தின் மேல் விமானம் விழுந்தது தெரிய வந்தது. அங்குதான் எனது தாயார் வேலை பார்த்தார் என்றும், அவருடன் எனது மகளும் உடன் இருந்தார் என்றும், இருவரையும் தற்போது காணவில்லை," என்றும் அவர் கூறியுள்ளார்.
"எனது டி.என்.ஏ. பரிசோதனைக்காக கொடுத்துள்ளேன்," என்றும் அவர் தெரிவித்துள்ளார். "ஒருவேளை எனது தாயார் மற்றும் மகள் இறந்திருந்தால், அவர்களது உடலாவது எனக்கு கிடைக்க வேண்டும் என்றும், 72 மணி நேரம் காத்திருக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்," என்றும் அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.