கர்நாடகாவில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மாநில அரசு புதிய விதிகளை உருவாக்கும் வரை, பைக் டாக்ஸி சேவைகளைத் தொடர முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்துள்ளன. ஆனால், பைக் டாக்ஸிகள் இயங்க முறையான கொள்கை அவசியம் என அரசு தரப்பு வாதிடுகிறது. "மாநில விதிகள் இல்லாததால் பைக் டாக்ஸிகள் இயங்க முடியாது" என்று அட்வகேட் ஜெனரல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஏற்கனவே, ஏப்ரல் 2 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, ஜூன் 15-க்குள் அனைத்து பைக் டாக்ஸி சேவைகளையும் நிறுத்தும்படி கூறியிருந்தது. இந்த தடை, கர்நாடகாவில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என ராபிடோ நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தங்கள் ஓட்டுநர்களில் 75% பேர், சராசரியாக மாதம் 35,000 ரூபாய் வருமானம் ஈட்டுவதாகவும், பெங்களூருவில் மட்டும் ஓட்டுநர்களுக்கு 700 கோடி ரூபாயும், ஜி.எஸ்.டி.யாக 100 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளதாகவும் ராபிடோ சுட்டிக்காட்டியுள்ளது.
போக்குவரத்து துறையும் இந்தத் தடையை அமல்படுத்த போவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூன் 24 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.