ஹர்சத் மேத்தா ஞாபகம் இல்லையா? பங்குச்சந்தை குறித்து தவறான தகவலை பரப்பும் ராகுல் காந்தி: பாஜக கண்டனம்..!

Siva

செவ்வாய், 8 ஜூலை 2025 (09:35 IST)
இந்தியப் பங்குச் சந்தைகள் குறித்து தேவையில்லாத பயத்தையும், பிழையான செய்திகளையும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரப்பி வருவதாக பா.ஜ.க. கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவை சேர்ந்த 'ஜேன் ஸ்ட்ரீட் கேப்பிடல்' என்ற பங்கு வர்த்தக நிறுவனத்திற்கு இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் தடை விதித்திருந்தது. இந்திய பங்குச் சந்தையில் தங்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இந்த விவகாரம் தொடர்பாக, ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில், செபி மீது குறை கூறியதுடன், பல கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, தனது 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "செபி ஒரு சர்வதேச நிறுவனத்தை பங்குச் சந்தை முதலீட்டில் தடை செய்து சிறந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் உறுதியான செயல். ஆனால், இதனை வைத்து ராகுல் காந்தி பரபரப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார். செபி நடவடிக்கை எடுத்ததால்தான் ராகுல் காந்தி அதை பற்றிப் பேசவே முடிகிறது" என்று சாடியுள்ளார்.
 
மேலும், "பங்குச் சந்தையில் பெரிய 'சுறாக்கள்' சிறு முதலீட்டாளர்களை வேட்டையாடுவதாக ராகுல் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால், மோடி அரசு செபி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது. அதன் சுதந்திரமான செயல்பாடுகளையும், கண்காணிப்புத் திறனையும் மேம்படுத்தியுள்ளது" என்றும் அமித் மாளவியா குறிப்பிட்டார்.
 
"காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக், யு.டி.ஐ. என பல பங்குச் சந்தை முறைகேடுகள் நடந்தன. அவர்கள் சுதந்திரமாக முறைகேடு செய்ய காங்கிரஸ் ஆட்சி அனுமதித்தது" என்று குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்