என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

Siva

ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (08:21 IST)
பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ், வாக்காளர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டுள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், நான் இணையதளம் மூலம் ஆய்வு செய்தபோது என் பெயர் இல்லை என்பது தெரியவந்தது. இணையதளப் பட்டியலை நம்பி இருக்கும் பலருக்கும் இதே நிலை ஏற்படலாம். ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் தம்பதியின் பெயர்கள்கூட விடுபட்டுள்ளன. சுமார் 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது" என்று குற்றம் சாட்டினார்.
 
ஆனால், இந்த குற்றச்சாட்டை மாநில துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். "தேஜஸ்வி யாதவ் கூறியது உண்மை அல்ல. பட்டியலில் சரியாக தேடினால் அவரது பெயர் நிச்சயம் இருக்கும். வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு அடுத்ததாக, அவரது பெயர் இடம் பெற்றுள்ளது" என்றும் அவர் புகைப்பட ஆதாரத்துடன் விளக்கமளித்தார்.
 
இந்தச் சம்பவம், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்