நடிகை ஆலியா பட் பெர்சனல் உதவியாளர் திடீர் கைது.. பாலிவுட்டில் பரபரப்பு..!

Mahendran

புதன், 9 ஜூலை 2025 (10:29 IST)
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளராக பணிபுரிந்த வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்பவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடிகை ஆலியா பட்டிடம் ரூபாய் 77 லட்சம் வரை மோசடி செய்ததாகவும், ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் கணக்குகளில் முறைகேடுகள் செய்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆலியா பட்டின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வேதிகா ஷெட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில்தான் இந்த மோசடி நடந்துள்ளதாக காவல்துறையில் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி குறித்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த வேதிகா ஷெட்டியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று காலை அவர் பெங்களூரில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
முதற்கட்ட விசாரணையில், வேதிகா ஷெட்டி போலி பில்களை தயாரித்து, ஆலியா பட்டிடம் கையொப்பம் பெற்று அந்த பணத்தை அபகரித்துள்ளதாகவும், பயண செலவுகள் உள்ளிட்டவற்றில் முறைகேடு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டால், மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்