இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்துக்கிடையே, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கியை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையிலேயே, பிரதமர் மோடி நேற்று கூறியதாவது, ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பல குடும்பங்கள், இந்தியாவிலேயே விடுமுறைகளை செலவிட முடிவு செய்துள்ளன என்றார்.
தனது மாதாந்திர "மன் கி பாத்" ரேடியோ நிகழ்ச்சியில், நாட்டெங்கிலும் உள்ள மக்களில் உள்ளூர் தயாரிப்புகளுக்கான ஆதரவு பெருகி வருவதை அவர் 'Vocal for Local' என குறிப்பிட்டார். அண்மையில் தன்னை கணிசமாக பாதித்த சில நிகழ்வுகள் குறித்து பேசும் போது, ஒரு பெற்றோர் தற்போது தங்கள் குழந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளையே வாங்குவதாகவும், இது சிறுவயதிலிருந்தே இந்திய பொருட்கள் குறித்து தங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் என்றும் கூறினர்.
பல குடும்பங்கள், அடுத்த விடுமுறையை வெளிநாடு செல்லாமல், இந்தியாவின் அழகான இடங்களில் கழிக்க திட்டமிட்டுள்ளன. பல இளைஞர்கள், திருமணத்தையும் இந்தியாவிலேயே நடத்த முடிவு செய்துள்ளனர். முக்கியமாக, துருக்கி மற்றும் அசர்பைஜான் ஆகியவை பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், அங்கு பயணம் செய்ய இந்தியர்கள் தவிர்த்து வருகின்றனர். ஆபரேஷன் சிந்தூர் காலத்தில், துருக்கியின் ட்ரோன்களை பாகிஸ்தான் அதிகமாக பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
விசா செயலாக்க நிறுவனமான அட்லிஸ் நிறுவனர் மோஹக் நஹ்தா தெரிவித்ததாவது, “இந்திய பயணிகள் துருக்கி மற்றும் அசர்பைஜானுக்கு செல்லாமல் முடிவு செய்ததால், 36 மணி நேரத்திலேயே 60% விசா விண்ணப்பங்கள் ரத்தானது” என்றார்.
தங்கள் நிறுவனம் தற்போது துருக்கி, அசர்பைஜானுக்கான விளம்பர வேலைகளையும் நிறுத்தியுள்ளதாகவும், இந்திய உணர்வுடன் ஒற்றுமை காட்டும் நோக்கில் இதை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.