சிறுமியிடம் சில்மிஷம் செய்த சிறுவனை சங்கிலியால் கட்டிவைத்த போலீசார்

திங்கள், 26 செப்டம்பர் 2016 (16:23 IST)
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 13 வயது சிறுவனை மெய்ன்புரி சேர்ந்த காவல் துறையினர் சங்கிலியால் கட்டிவைத்து விசாரணை மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 13 வயது தலித் சிறுவன், 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டப்பிரிவு எண் 354, 504, 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இதையடுத்து அவர் மெய்ன்பூரியை அடுத்த கொட்வாலி காவல் நிலையத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் போலீசார் அவரை சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர்.
 
இதற்கிடையில் அந்த காவல் நிலையத்திற்கு சென்ற பத்திரிகையாளர் ஒருவர், இந்த சம்பவத்தை கண்டு உடனே அவர் தன்னிடமிருந்த செல்போனில் இதனை படம்பிடித்துள்ளார். பின்னர் அதனை வாட்ஸ்-அப் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.
 
இதையடுத்து இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

வெப்துனியாவைப் படிக்கவும்