திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாள் நேற்று முன் தினம் இரவு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் கிரி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்றைய 3ஆம் நாளில் கோவில் நடை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டதை தொடர்ந்து, விஸ்வரூபம் மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகங்கள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமானது. நண்பகல் 12 மணிக்கு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்கச் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை நிகழ்வுகளை தொடர்ந்து, சுவாமி மீண்டும் தங்கத் தேரில் கிரி வீதி வலம் வர உள்ளார்.