கெஞ்சும் வோடபோன்... கணக்கை தீர்த்ததா ஏர்டெல்?

சனி, 29 பிப்ரவரி 2020 (14:11 IST)
ஏர்டெல் நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் ரூ.8,004 கோடியை இரண்டாவது தவணையாக செலுத்தியுள்ளது.
 
வோடபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகைகளில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை ஜனவரி 23 ஆம் தேதிக்குள்  செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  
 
ஆனால், கெடு தேதி முடிந்தும் அப்பணம் செலுத்தப்படாத நிலையில், வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி செலுத்துமாறு  அதிரடியாக உத்தரவிட்டது.  
இதனிடையே ஏர்டெல், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் ரூ.10 ஆயிரம் கோடியை பிப்.20 ஆம் தேதிக்குள்ளும், மீதமுள்ள தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்துவதாக தெரிவித்திருந்தது. அதன்படி  ரூ.10 ஆயிரம் கோடியை ஏர்டெல் ஏற்கனவே செலுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது தவணையாக ரூ.8,004 கோடியை செலுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் 39 ஆயிரத்து 723 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாக அரசு மதிப்பிட்டுள்ளது. அதில் ரூ.18,004 கோடியை கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால்,  வோடபோன் நிறுவனமோ அரசுக்கு செலுத்த வேண்டிய மீதத்தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்