TNPL எனப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் டி20 போட்டியின் 9வது சீசன் நேற்று தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் கோவை, நெல்லை, சேலம் மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் நடைபெறுகிறது. லீக் சுற்றில் தலா ஒருமுறை மோதும் அணிகளில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆப் தகுதி பெறும்.
நேற்று கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் கோவை கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் விஷால் வைத்யா, லோகேஷ்வர் குறைந்த ரன்களில் அவுட் ஆனார்கள். சச்சின் நின்று விளையாடி 51 ரன்களை சேர்த்து அவுட் ஆனார். ஆண்ட்ரே சித்தார்த் மற்றும் கேப்டன் ஷாருக்கான் நிதானமாக விளையாடி 25 ரன்களில் அவுட் ஆனார்கள்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த கோவை கிங்ஸ் 149 ரன்களை குவித்திருந்தது. 150 இலக்குடன் களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் ட்ராகன்ஸ் பேட்டிங்கில் கலக்கியது. அஸ்வின் 15 ரன்களிலேயே அவுட் ஆனாலும், ஷிவம் சிங் அடித்து ஆடி 82 ரன்களை குவித்தார். கடைசி வரை அவுட் ஆகாமல் நின்று அவர் விளையாடியதால் திண்டுக்கல் அணி 17.2 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
Edit by Prasanth.K