நேற்று முதல் நாளில் எதிர்பார்த்ததை விட இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 359 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன் மூலம் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இல்லாததால் இந்திய அணித் தடுமாறுமோ என்ற சந்தேகத்துக்கு பதிலளித்துள்ளனர்.
இந்த போட்டியில் வர்ணனையாளராகப் பணியாற்றிய சஞ்சய் மஞ்சரேக்கர் போட்டியின் போது வேண்டுமென்றே கோலியை சீண்டும் விதமாகப் பேசி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடி வந்தபோது மஞ்சரேக்கர் ” இருவருமே ஆஃப் சைடில் வரும் பந்துகளை சரியாகக் கணித்து விட்டு விளையாடுகின்றனர். ஆனால் இதற்கு முன்பு இருந்த ஒரு பேட்ஸ்மேனாக இருந்தால் அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்திருப்பார்” எனப் பேசினார். மறைமுகமாகக் கோலியை தாக்கிய அவரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற ஒரு முன்னாள் வீரரை ஏன் அவர் இல்லாதப் போட்டியில் தாக்கிப் பேசவேண்டும் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.