இதான்டா கம்பேக்… பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தன்னை நிரூபித்த கருண் நாயர்!

vinoth

திங்கள், 14 ஏப்ரல் 2025 (08:11 IST)
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 205 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ரிக்கல்ட்டன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க உதவி புரிந்தனர்.

இதையடுத்து 206 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்த தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி அணி தோற்றாலும் அந்த அணியில் இம்பேக்ட் ப்ளேயராகக் களமிறங்கிய கருண் நாயரின் ஆட்டம் மிகச்சிறந்த இன்னிங்ஸாக அமைந்தது.

கடந்த சில சீசன்களாக எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாத கருண் நாயர் மீண்டும் அணிக்குள் வந்து 40 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து கலக்கினார். வழக்கமாக நிதானமாக விளையாடக் கூடிய கருண் நேற்றைய இன்னிங்ஸில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் மிகச்சிறந்த கம்பேக் இன்னிங்ஸ் ஒன்றை அவர் ஆடியுள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்