பாகிஸ்தானில் இரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் ஏன்? இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?

Sinoj

புதன், 17 ஜனவரி 2024 (21:09 IST)
செவ்வாய்க்கிழமை அன்று, அண்டை நாடான இரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
 
ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இரண்டு தளங்களைக் குறி வைத்ததாக இரான் கூறியதாக அந்நாட்டு ராணுவத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
ஆனால், பாகிஸ்தான் இதை நிராகரித்துள்ளது. இது “கடுமையான விளைவுகளுக்கு” வழிவகுக்கும் “சட்டவிரோத செயல்” என்று கூறியது.
 
இராக் மற்றும் சிரியாவுக்கு அடுத்தபடியாக கடந்த சில நாட்களில் இரானின் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது நாடு பாகிஸ்தான்.
 
பாகிஸ்தான் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதது. செவ்வாய்க்கிழமை தாக்குதல் இரு நாடுகளின் எல்லையான பலுசிஸ்தானின் பரந்த தென்மேற்கு மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைத் தாக்கியது.
 
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், “இரான் தனது வான்வெளியில் தூண்டுதலின்றி அத்துமீறி நுழைந்ததை” கடுமையாகக் கண்டித்துள்ளது.
 
அத்துடன், இரானுக்கான தூதரை பாகிஸ்தான் திரும்பப் பெற்றுள்ளது. தற்போது இரான் சென்றுள்ள பாகிஸ்தானுக்கான இரான் தூதர் மீண்டும் பணிக்கு தனது நாட்டிற்கு வர முடியாது என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
 
இந்தச் சம்பவத்தை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியது. “பாகிஸ்தானுக்கும் இரானுக்கு இடையே பல தகவல்தொடர்பு சேனல்கள் இருந்தபோதிலும் இந்த சட்டவிரோத செயல் நடந்துள்ளது நிலைமையை மேலும் தீவிரமாக்குவதாகவும்” கூறியுள்ளது.
 
இரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இரான் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பாகிஸ்தான் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. மேலும், “பாகிஸ்தானின் இறையாண்மை மீதான இந்த அப்பட்டமான மீறல் மற்றும் அதன் விளைவுகளுக்கு இரானே பொறுப்பு,” என்றும் கூறியுள்ளது.
 
 
இரான் திங்கட்கிழமை இரவு, வடக்கு இராக்கில் உள்ள நகரமான இர்பிலில் உள்ள இலக்குகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.
 
காஸா நிலப்பகுதியில் இஸ்ரேலுக்கும் இரான் ஆதரவு பெற்றா பாலத்தீனிய குழுவான ஹமாஸ் இடையே அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரானின் தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மோதல்களை பெரிதாக்குவதில் ஈடுபட விரும்பவில்லை என்று இரான் அறிவித்திருந்தாலும், அதன் "எதிர்ப்பு அச்சு" என்று அழைக்கப்படும் குழுக்கள் பாலத்தீனியர்களுடன் ஒற்றுமை காட்ட இஸ்ரேலுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
 
லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலிய படைகளுடன் எல்லை தாண்டிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது, ஷியா போராளிகள் இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் உள்ள கப்பல்களைத் தாக்கியுள்ளனர்.
 
ஹமாஸ் தலைவரை லெபனானில் நடத்திய தாக்குதலில் கொன்றுள்ளது இஸ்ரேல். புரட்சிகர காவலர் தளபதி சிரியாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இராக் மீதான விமானத் தாக்குதலில் இராக் போராளிகள் தலைவரை அமெரிக்கா கொன்றுள்ளது. மேலும், ஏமனில் ஹூத்தி இலக்குகள் மீதும் அமெரிக்கா குண்டுவீசியுள்ளது.
 
பல காலமாகவே, பாகிஸ்தானும் இரானும், ஜெய்ஷ்-அல்-அத்ல் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத குழுக்களை எதிர்த்து, மக்கள் தொகை குறைவான இந்த எல்லைப் பகுதியில் போராடி வருகின்றன.
 
இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 900 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் பாதுகாப்பு என்பது இரு அரசுகளுக்கும் நீண்ட காலமாக கவலையாகவே இருந்து வருகிறது.
 
கடந்த மாதம் எல்லைக்கு அருகே நடந்த தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-அல்-அத்ல் குழுவை காரணமாக இரான் கூறுகிறது. இந்த தாக்குதல்களில் பல இரானிய காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
 
அப்போது, இரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹீடி, இந்த தாக்குதல்களுக்கு காரணமான போராளிகள் பாகிஸ்தானில் இருந்துதான் தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறினார்.
 
அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகத்தின் தகவலின்படி, ஜெய்ஷ்-அல்-அத்ல் சிஸ்தான்-பலுசிஸ்தானில் இயங்கும் "மிகவும் தீவிரமான மற்றும் செல்வாக்குமிக்க" சுன்னி போராளி குழு ஆகும்.
 
இரான் குறி வைத்த தீவிரவாத குழுவின் பின்னணி என்ன?
 
இரான் மற்றும் பாகிஸ்தான் கடற்படைகள், ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடாவில் ஒரு நாள் ராணுவப் பயிற்சியை நடத்தியதாக ஜனவரி 16 அன்று இஸ்லாமிய ரிபப்லிக் செய்தி நிறுவனம் (IRNA) அறிவித்துள்ளது.
 
போர்ப் படகுகள் மற்றும் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட போர்க் கப்பல்கள் அப்பயிற்சியில் பங்கேற்றதாக ஐ.ஆர்.என்.ஏ தனது அறிக்கையில் தெரிவித்தது.
 
அந்த அறிக்கையின்படி, அவசரகால சூழ்நிலைகளில் படைகளின் சூழ்ச்சிகள் மற்றும் தகவல்தொடர்புகளை ஒத்திகை செய்து பார்ப்பதே பயிற்சியின் நோக்கமாக இருந்தது.
 
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம், இஸ்லாமிய புரட்சிக் காவல் படை (IRGC) பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் சன்னி தீவிரவாதியான ஜெய்ஷ் அல்-அட்ல் குழுவின் தலைமையகத்தைத் தாக்கியதாக இரானிய நிறுவனங்கள் தெரிவித்த சில மணிநேரங்களில் இந்த ராணுவ ஒத்திகை பற்றிய அறிக்கை வெளிவந்தது.
 
இந்தக் குழு இரான் தலைநகரான தெஹ்ரானை எதிர்க்கிறது மற்றும் இரானிலிருக்கும் பலுச் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக போராடுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இரான் தாக்குதல் எதிரொலியாக அந்நாட்டிற்கான தூதரை பாகிஸ்தான் திரும்பப் பெற்றுள்ளது. அத்துடன், தற்போது இரான் சென்றுள்ள பாகிஸ்தானுக்கான இரான் தூதர் மீண்டும் பணிக்கு தனது நாட்டிற்கு வர முடியாது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
 
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரானால் நேற்றிரவு பாகிஸ்தானின் இறையாண்மை அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள, கொள்கைகளை மீறுவதாகும்.
 
இந்த சட்டவிரோத செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதில் எந்த நியாயமும் இல்லை. இந்த சட்டவிரோத செயலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை பாகிஸ்தானுக்கு உள்ளது. விளைவுகளுக்கான பொறுப்பு இரானிடம்தான் இருக்கும்.
 
இந்த செய்தியை இரான் அரசுக்கு தெரிவித்துள்ளோம். இரானில் உள்ள தூதரை திரும்பப் பெற பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதையும், இரான் சென்றுள்ள பாகிஸ்தானுக்கான இரான் தூதர் தற்போதைக்கு திரும்ப முடியாது என்பதையும் அவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளோம். வரும் நாட்களில் பாகிஸ்தான் -இரான் இடையே நடந்து கொண்டிருந்த அல்லது திட்டமிடப்பட்ட அனைத்து உயர்மட்டப் பயணங்களையும் நிறுத்தவும் முடிவு செய்துள்ளோம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்