ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது.. முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் பயணிகள்..!

Siva

ஞாயிறு, 2 மார்ச் 2025 (11:26 IST)
இன்று காலை முதல் ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதை அடுத்து, முன்பதிவு செய்ய முடியாமல் ரயில் பயணிகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே முன்பதிவு பயணச்சீட்டு எடுக்க, ஐஆர்சிடிசி இணையதளம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று காலை முதல் அந்த இணையதளம் முடங்கியுள்ளதாக பயனாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களை அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அவசரமாக பயணம் செய்ய முன்பதிவு செய்ய முயலும் போது, இணையதளம் செயலிழந்தால் எப்படிப் பயணம் செய்வது என பயனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சில இடங்களில் மட்டும் ஐஆர்சிடிசி இணையதளம் வேலை செய்வதாக கூறப்பட்ட நிலையில், பலர் செயலி மற்றும் இணையதள முடக்கத்தைக் குறிக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆன்லைனில் தான் 80% பயணச்சீட்டுகள் விற்பனையாகி வரும் சூழலில், நீண்ட நாட்களாக தட்கல் நேரத்தில் இணையதளம் மெதுவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால், பயணச்சீட்டுகளை சரியான நேரத்தில் முன்பதிவு செய்ய முடியவில்லை என பயனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது திடீரென இணையதளம் முழுமையாக முடங்கியிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் தலைசிறந்த தகவல் நுட்ப வல்லுனர்களை கொண்ட இந்தியாவில், ஒரே ஒரு செயலி மற்றும் இணையதளத்தை கூட சரியாக பராமரிக்க முடியவில்லையா என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்