சே... அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்

Webdunia
சனி, 17 மே 2014 (15:28 IST)
இனி நடிப்பதில்லை என்ற முடிவுடன் கலகலப்பு, மத கஜ ராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களை இயக்க மட்டும் செய்த சுந்தர். சி அரண்மனை படத்தை இயக்குவதுடன் நடிக்கவும் செய்துள்ளார். சுந்தர். சி இனி நடிக்க மாட்டார் என்று நம்பிக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சி. சொன்ன சொல்லை இப்படி காற்றில் பறக்கவிட்டுவிட்டாரே...?
ஆனால் ரசிகர்கள் இந்தளவுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. அரண்மனையில் சுந்தர். சி நாயகன் கிடையாது. அனைவரும் பயந்த மாதிரி ஹன்சிகா அவரது ஜோடியும் கிடையாது டூயட், தனிப்பாடல், துதிப் பாடல் என்று எதுவுமில்லை. அரண்மனை படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று நடித்திருக்கிறார். அதற்காக தொடர்ந்து நடிப்பார் என்று அர்த்தமில்லை. அரண்மனைக்கு அடுத்து சுந்தர். சி இயக்கும் இரு படங்களில் அவர் இயக்கம் மட்டும்தான். தமாஷுக்குக்கூட படத்தில் தலை காட்ட மாட்டாராம்.
 
சுந்தர். சி தந்திருக்கும் இந்த உத்தரவாதம் ஜில்லென்று இருந்தாலும், பொருத்தமான வேடம் அமைந்தால் நடிப்பேன் என்று அவர் கூறியிருப்பதுதான் உறுத்தல். நடிக்க ஆசை வந்துவிட்டால் பொருத்தமான வேடத்தை உருவாக்குவது பெரிய வேலையா என்ன...?