மருந்தாளரின் உயிரைப் பறித்து கந்து வட்டி.! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்..!

Senthil Velan
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (10:27 IST)
கடலூர் அருகே கந்துவட்டி பிரச்சனையால் மருந்தாளர் ஒருவர் பலியான சம்பவத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத காவல்துறையினரை கண்டித்து உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாழக்கொல்லையை சேர்ந்தவர் பூவழகன் (வயது 46). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். 
 
இவர் கடந்த 12-ந் தேதி இரவு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஷம் குடித்து விட்டு வந்தார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், புதுநகர் போலீசார் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பூவழகன், கடன் பிரச்சினையால் விஷம் குடித்தது தெரியவந்தது. 
 
இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூவழகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பூவழகன் கந்து வட்டி கொடுமையால் உயிரிழந்ததாகவும், அதற்கு காவல் துறையினர் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கூறி இறந்தவரின் மனைவி,மகன், மகள் மற்றும் உறவினர்கள் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 
தகவலறிந்து வந்த பாமகவினரும் காவல் நிலையத்தில் துணைக்காவல் கண்காணிப்பாளர் சௌமியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் முற்றுகையிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தின் காரணமாக கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்