மேட்டூர் அணைவிலிருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு!

J.Durai

புதன், 31 ஜூலை 2024 (13:16 IST)
கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக,  அங்குள்ள அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி நீர் திறந்து விடப்படுகிறது. 
 
நேற்று மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மேட்டூர் அணையிலிருந்து,  நேற்று இரவு 81 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
 
தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 
 
இந்நிலையில் பவானி பகுதியில் காவிரி கரையோரத்தில், கந்தன் பட்டறை, பசுவேஸ்வரர் வீதி, மீனவர் தெரு, பழைய பாலம், பாலக்கரை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 
அங்கிருந்து வெளியேறிய மக்கள் பீரோ கட்டில் டிவி உள்ளிட்ட உடைமைகளை எடுத்துக் கொண்டு, காமராஜர் நடுநிலைப்பள்ளி, பசுவேஸ்வரர் ஆரம்பப்பள்ளி, கிழக்குப் பள்ளி ஆகிவிடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்
 
மேலும், பவானி அம்மா உணவகத்தில் இருந்து இவர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
 
பவானி எம்எல்ஏ கே சி கருப்பண்ணன், கரையோர பகுதிகளுக்கு சென்று அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து தருமாறு வருவாய் துறை காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
 
தற்போதைய நிலவரப்படி பவானி கரையோர பகுதியில் உள்ள வீடுகளின் வாசல்களில் தண்ணீர் தொட்டு செல்கிறது.
 
தொடர்ந்து தண்ணீர் வடியும் வரை முகாம்களில் தங்க வைக்க வருவாய் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்