எப்ப வேணாலும் அணை நிரம்பலாம்..! பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்! - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Prasanth Karthick

திங்கள், 29 ஜூலை 2024 (11:07 IST)

மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணை கொள்ளளவு 100 அடியை தொட்ட நிலையில் மாலை முதலாக 16 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 

நேற்று மாலை 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 18 ஆயிரம் அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்தை பொறுத்து இன்றே 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தற்போது மேட்டூர் அணை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தற்போதைய நிலவரப்படி அணை கொள்ளளவு 116 அடியை எட்டியுள்ளதாகவும், அடுத்த ஓரிரு தினங்களுக்குள் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இதனால் எந்த நேரத்திலும் அணையில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என்பதால், காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்