ஆன்லைன் வகுப்பில் புகுந்து ஆபாச பதிவிட்ட ஆசாமி! – ஆசிரியர்கள் அதிர்ச்சி!

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (12:50 IST)
சென்னையில் மாணவர்களுக்கான ஆன்லைன் பாடத்தில் இடைப்புகுந்து ஆபாச பதிவிட்ட ஆசாமியை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றும் அவ்வாறாக செயலி ஒன்றின் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றது. இந்த செயலியின் மூலமாக படிப்பதற்கான ஐடி, பாஸ்வேர்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் காணொளி மூலமாக பாடங்களை நடத்தி வந்துள்ளார். அப்போது செயலியின் பாஸ்வேர்டை முறைகேடாக தெரிந்து கொண்டு வகுப்பு நடந்த சர்வருக்குள் புகுந்த ஆசாமி ஒருவர் ஆபாசமான பதிவுகளை இட்டுள்ளார். இதனால் ஆசிரியரும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சைபர் க்ரைம் போலீஸார் ஆசாமியை தேடி வருகின்றனர்.

ஆன்லைன் பாடத்திட்டங்களின்போது மாணவர்கள் ஆபாச தளங்களை அணுக வாய்ப்பிருப்பதாக பலர் தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்