சேலம் மற்றும் நாமக்கலில் உள்ள தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு துவங்கியது

Webdunia
சனி, 10 மே 2014 (09:25 IST)
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
 
தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் சேலம் மாவட்டத்தில் உள்ள செங்கலணை தெருவில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மற்றும்  நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குசாவடியகளில் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. 
 
இதையடுத்து இந்த வாக்கு சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி இன்று  இந்த இரு வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
 
இன்று காலை 9 மணி வரை நாமக்கல் வாக்குச்சாவடியில் 25% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.