கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

Webdunia
திங்கள், 13 மே 2019 (20:57 IST)
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் மகாத்மா காந்தியை சுட்டு கொலை செய்த நாதுராம் கோட்சே என்றும் கமல்ஹாசன் பேசியது அகில இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பாஜகவினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும், திரையுலகினர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழிசை, விவேக் ஓபராய், சுப்பிரமணியன் சுவாமி, எச்.ராஜா உள்பட பலர் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் கடுமையான வார்த்தைகளால் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கமல்ஹாசன் நாக்கில் சனி உள்ளது. அதனால் தான் அவர் அப்படி பேசுகிறார். அவருடைய கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும்.  மதம் பார்த்து தீவிரவாதம் வருவது கிடையாது. தீவிரவாதம் செய்பவர்களுக்கு மதம் கிடையாது. தீவிரவாதம் செய்பவர்கள் தீவிரவாதிகள் தான். அவர்களை இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் போன்ற மதங்களோடு சம்பந்தப்படுத்தகூடாது. 
 
இந்து தான் முதல் தீவிரவாதி என்று கூறி சிறுபான்மையர்களை திருப்திப்படுத்த கமல் நடிக்கின்றார். இதேபோல் அவர் பேசினால் அவருடைய நாக்கை யாராவது அறுக்கத்தான் போகின்றார்கள். கமல் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் விஷம் தான். விதையை விதைத்தால் செடி முளைக்கும். விஷத்தை விதைத்தால் விஷம் தான் வளரும். எனவே வன்முறையை தூண்டும் வகையில் பேசிவரும் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது கட்சியை தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்