உடல் நலக்குறைவால் பேரறிவாளன் அவதி: சிறைத்துறை டிஐஜியிடம் மனு

Webdunia
சனி, 6 ஜூன் 2015 (10:10 IST)
சிறுநீர் தொற்று நோய்க்கு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென, சிறைத்துறை டிஐஜியிடம் பேரறிவாளன் மனு அளித்துள்ளார்.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை அறிவிக்கப்பட்ட, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ளனர்.
 
மேலும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவரை அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 
 
வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். பின்பு செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் கூறியதாவது:-
 
எனது மகன் பேரறிவாளனுக்கு சிறுநீர் தொற்று நோய் கடுமையாக தாக்கியுள்ளது. சிறுநீர் தொற்று நோய் காரணமாக, பேரறிவாளன் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் இதற்காக சிகிச்சை அளித்துள்ளனர்.
 
சிறுநீர் தொற்றுக்கு, வேலூரில் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் இல்லை. எனவே, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென சிறைத்துறை டிஐஜியிடம் மனு அளித்து உள்ளார். எனவே, அவரது கோரிக்கையை அரசு கவனிவுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.