வாகனம் மோதி விபத்து; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (17:52 IST)
கரூர் அருகே அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டுமென்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


 


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் இலவச மடிக்கணினி மற்றும் பொதுமக்கள் குறைகளை கேட்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிலும், திருமண விழாவில் ஒன்றிலும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.  பள்ளப்பட்டியிலிருந்து அரவக்குறிச்சி வழியாக சென்று கொண்டிருந்த போது அவருடைய கார் அதிக வேகத்தில் சென்றது.

அவரின் பாதுகாப்பிற்காக சென்று கொண்டிருந்த எஸ்காட் பாதுகாப்பு வாகனமும் அதிகவேகத்தில் சென்றது. அப்போது, நிலைதடுமாறிய பாதுகாப்பு வாகனம் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய குறிக்காரன் வலசு பகுதியை சார்ந்த லட்சுமணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் இதை கண்டும், காணாமல் சென்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மற்ற நிகழ்ச்சிகளுக்காக சென்றுவிட்டார். பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த லெட்சுமணனின் உடல் ஆம்புலன்ஸ்சில் கரூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழக அரசு தக்க உயிரிழந்த கூலித்தொழிலாளி லட்சுமணன் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதியை வழங்க வேண்டுமென்றும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்