நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (15:58 IST)
மகள் திருமணத்துக்காக பரோலில் வெளியில் வந்திருக்கும் நளினிக்கு மேலும் 3 வார காலம் பரோல் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நளினி தனது மகள் திருமணத்திற்கான வேலைகளை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு ஊடகங்களில் பேட்டி அளிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளோடு ஒரு மாதக் காலம் பரோல் வழங்கியது.

கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெளியே வந்த நளினி தனது மகள் திருமணத்துக்கான வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் அவரது பரோல் காலம் முடியவுள்ள நிலையில் மகளின் திருமண வேலைகள் முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் இது சம்மந்தமாக நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் எனத் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து இன்று நடந்த விசாரணையின் போது நளினிக்கு மேலும் 3 வாரகாலம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15 வரை அவரது பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்