தமிழகத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் தோல்வி எண்ணிக்கை துவக்கம்

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2014 (14:43 IST)
நீலகிரி தனி தொகுதியில் அனைத்து கட்சிகளின் வேட்புமனுக்கள் மற்றும் சான்றிதழ்களை பரிசீலனை செய்த மாவட்ட நிர்வாகம், பாஜக மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தோல்வி எண்ணிக்கையை துவங்கிவிட்டன.
BJP started its losing count
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை மாவட்ட ஆட்சியர் சங்கரிடம் தாக்கல் செய்தனர். 3 பெண்கள், 13 ஆண்கள் என 16 வேட்பாளர்களால் 21 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் கட்சி சார்பில் 9 வேட்பாளர்களும், சுயேட்சையாக 8 வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
 
நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் கோபாலகிருஷ்ணன், திமுக சார்பில் ஆ.ராசா, பாரதிய ஜனதா சார்பில் குருமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அனிதா நைஜிஸ் சைடு, பகுஜன் சமாஜ் சார்பில் கண்ணன், ஆம் ஆத்மி சார்பில் ராணி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில் இன்று காலை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீது பரிசீலணை நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த குருமூர்த்தியின் மனு அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. கட்சியின் அங்கீகார கடிதம் தாமதமாக கிடைத்ததாக கூறி குருமூர்த்தியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Narendra Modi
இந்த முடிவுக்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் வேட்பு மனு தள்ளுபடி செய்ததற்கு நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
இதேபோல் ஆம் ஆத்மி வேட்பாளர் ராணியின் வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ராணி தாக்கல் செய்த ஜாதி சான்றிதழ் 1986 ஆம் ஆண்டு பெறப்பட்ட சான்றிதழ். புதிய சான்றிதழை தாக்கல் செய்யாததால் ராணியின் மனுவை தள்ளுபடி செய்ததாக தெரிவித்தனர்.
 
இதன்மூலம் தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தோல்வி எண்ணிக்கையை துவங்கிவிட்டன.