மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை தடுக்க சட்டம்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
வெள்ளி, 24 ஜூன் 2011 (11:43 IST)
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை நீக்க போதிய நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு அலட்சியம் செய்து வருவதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதனை தடுப்பதற்கான சட்டத் திருத்தத்தை ஆகஸ்ட்டில் கொண்டுவராவிட்டால் பிரதமர் அலுவலக அதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாக்கடை அள்ளும் பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை சரிவர அமல்படுத்தவில்லை என்று கூறி மத்திய, மாநில அரசுகள் மீது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
சாக்கடை கால்வாய், கழிவுநீர்த் தொட்டி ஆகியவற்றில் இந்தப் பணிக்காக மனிதர்கள் இறங்கும்போது விஷ வாயு தாக்கி பலர் உயிரிழப்பதால் எந்திரங்கள் மூலம் பராமரிப்புப் பணிகளை நடத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரிக்கின்றனர். இந்த அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட்டில் தமிழக அரசு அதிகாரிகள் சிலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
மனித துப்புரவு பணியாளர்கள் நியமனம் மற்றும் உலர் கழிவறைகள் கட்டுமான தடுப்புச் சட்டத்தில் (மத்திய அரசுச் சட்டம்) சில திருத்தங்களை கொண்டு வந்தால்தான், மனிதர்களை அதில் பயன்படுத்தாமல் இருக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், அந்த சட்டத்தில், 2 மாநில அரசுகள் பரிந்துரைக்கும் பட்சத்தில்தான் அந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரமுடியும் என்று சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மற்றொரு மனுவை நாராயணன் தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த முக்கியத்துவத்தையும் காட்டவில்லை. இதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவராதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் செயலாளர் இந்த வழக்கு விசாரணைக்காக 23ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, எப்போது அந்த திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்? என்பதையும் குறிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் செயலர் ஆஜராகவில்லை. விசாரணை தேதியில் ஏற்பட்ட குழப்பத்தால் செயலாளரை ஆஜர்படுத்த முடியவில்லை என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு 29ஆம் தேதிதான் விசாரணைக்கு வருவதாக நினைத்ததாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். எனவே வழக்கு தொடர்பான ஆயத்தங்களை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும் இணை செயலாளர் நேரில் ஆஜரானார். செயலாளர் தரப்பில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சாக்கடை பராமரிப்பு பணிகளுக்கும், மனித கழிவுகளை அகற்றுவதற்கும் மனிதர்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தகுந்த சட்டத் திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்து பிரதமருக்கு தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் கடிதம் எழுதிய பிறகு, இந்த விவகாரத்தில் பிரதமர் தனிக்கவனம் செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மனு கண்டனத்துக்குரியது. தேவையான சட்டத்திருத்தங்களை செய்வதற்காக 6 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
இந்த வழக்கை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் தகுந்த சட்டத்திருத்தம் செய்யப்படாவிட்டால், பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் அல்லது சட்டத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன், மாநில தலைமைச் செயலர் தொடர்ந்து தொடர்புகொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றிய விளக்கங்கள் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.