புதுச்சேரியில் 13 வயது சிறுமிகள் இருவரை 14 பேர் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த 13 வயது மாணவிகள் இருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்த மாணவிகளுடன் புஷ்பராஜ் (25), மணிமாறன் (27) என்ற இளைஞர்கள் பேசி பழகி வந்த நிலையில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மாணவிகளும் அதை நம்பி அவர்களோடு பழகி வந்த நிலையில் கடந்த 2ம் தேதி மாணவிகளை கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்ற அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மாணவிகள் இருவரும் இரவு நெடுநேரம் கழித்து வீடு திரும்பிய நிலையில் சோர்வுடன் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மாணவிகளை தனியாக அழைத்து சென்று விசாரித்ததில் இந்த சம்பவங்கள் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் 10க்கும் மேற்பட்டவர்கள் அந்த மாணவிகளிடம் தனித்தனியாக பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டல் மற்றும் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் புஷ்பராஜ், மணிமாறனை கைது செய்தனர். மேலும் மாணவிகள் அளித்த தகவலின்பேரில் மேலும் 4 பேரை பிடித்து தனியாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளால் 14 பேரும் அடையாளம் காட்டப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடந்து வருகிறது.
Edit by Prasanth.K