மீனவர்கள் நலன் காக்க வழிமுறை: வைகோவுக்கு, பிரதமர் கடிதம்
திங்கள், 31 ஜனவரி 2011 (16:25 IST)
''மீனவர்கள் நலனைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கண்டறிய இலங்கை அரசுடன் பேசி முடிவு செய்து உள்ளோம்” என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ம.தி.மு.க தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஜனவரி 22ஆம் தேதி வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கயல்விழியை விடுவித்துத் தமிழகம் கொண்டு வந்தது சேர்த்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும், தமிழக மீனவர் பிரச்சனை குறித்தும் பிரதமரிடம் கடிதத்தைக் கொடுத்து, தனது கருத்துகளையும் தெரிவித்தார்.
ஆனால், அதே நாளில் புஷ்பவனத்தைச் சார்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி குறித்து அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்து ஜனவரி 23ஆம் தேதி வைகோ அவர்கள் பிரதமருக்குத் தொலைநகல் செய்தி அனுப்பினார்.
ஜனவரி 25ஆம் தேதியிட்டு பிரதமர், வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம் இன்று கிடைத்தது.
PTI
அந்தக் கடிதத்தில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதாவது:
“2011 ஜனவரி 23ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கடிதத்தில், பாக் வளைகுடாவில் நமது மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.
ஜனவரி 22ஆம் தேதி என்னைச் சந்தித்து இந்தப் பிரச்சனை குறித்து என்னிடம் கூறியபோது, நம்முடைய இந்திய மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைத் தடுக்க, நம்முடைய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும் என்று நான் உங்களுக்கு உறுதி அளித்து இருந்தேன்.
அதன்படி, இந்தியாவின் அயலுறவுத்துறைச் செயலர், அதிகாரிகள், தமிழக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அனுப்பி, இலங்கை அரசுடன் இந்தப் பிரச்சனை குறித்து விவாதித்து நம்முடைய மீனவர்கள் நலனைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கண்டறிய முடிவு செய்து உள்ளோம்” என்று தெரிவித்துள்ள அதில் கூறப்பட்டுள்ளது.