"விக்கிலீக்ஸ்" தகவலால் இருநாட்டு உறவு பாதிக்கப்படாது: இந்தியா - யு.எஸ்.

வியாழன், 23 டிசம்பர் 2010 (12:53 IST)
"விக்கிலீக்ஸ்" இணைய தளம் வெளியிட்ட தகவலால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்படாது என்று இருநாட்டு அயலுறவுத் துறை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பற்றி டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி, தங்கள் நாட்டு அரசு தலைமைக்கு அனுப்பிவைத்த சர்ச்சையான கடிதங்கள் தொடர்பான ஆவணங்களை, அண்மையில் "விக்கிலீக்ஸ்" இணையதளம் வெளியிட்டது.

இதனால் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாட்டு அரசுகளுமே சங்கடத்திற்குள்ளாகின.

இந்நிலையில் "விக்கிலீக்ஸ்" வெளியிட்ட ஆவணங்களால் அமெரிக்க, இந்திய உறவுகளில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்று இரு நாடுகளும் ஒத்துக்கொண்டுள்ளது.

அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கிருஷ்ணாவுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற நடந்த உரையாடலின் போது, "விக்கிலீக்ஸ்" இணையதளம் ஏற்படுத்திய சர்ச்சையால் அமெரிக்க-இந்திய உறவு எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்றும், ஒருமித்த கருத்துடன் இரு நாடுகளும் செயல்படுமென பேசினார். அதனை கிருஷ்ணாவும் ஏற்றுக்கொண்டார் என அமெரிக்க மற்றும் இந்திய அயலுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்