ஏற்றுமதியாளர்கள் யூரோவுக்கு மாற வேண்டும்- ரிசர்வ் வங்கி!

திங்கள், 17 டிசம்பர் 2007 (11:45 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள ஏற்றுமதியாளர்கள் யூரோ போன்ற வேறு அந்நிய செலவாணியில் வர்த்தகம் செய்ய தொடங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் துரைராஜன் கூறினார்.

ஹைதரபாத்தில் ஏற்றுமதி மேம்பாட்டு குறித்த வங்கி அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் துரைராஜன் பேசும் போது, இந்த நெருக்கடியில் இருந்து ஏற்றுமதியாளர்களை காப்பதற்காக ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான கடனை உரிய நேரத்தில் கொடுக்குமாறு ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

ரிசர்வ் வங்கி ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகள் செய்யும் சேவையை மேம்படுத்துவதற்காக 2005 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆலோசனை குழுவை அமைத்தது. இதில் வங்கி அதிகாரிகளும், ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். இந்த ஆலோசனை குழு பல்வேறு பரிந்தரைகளை வழங்கியுள்ளது. இவற்றில் பல பரிந்துரைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்