வர்த்தக ஒப்பந்தம் : ஆசியான் அமைப்பிடம் பேச்சு!

திங்கள், 19 நவம்பர் 2007 (17:31 IST)
இந்தியாவிற்கும் ஆசியான் அமைப்பு நாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக உடன்பாடு காண்பதற்கான உயர் மட்ட பேச்சு வார்த்தை நாளை (செவ்வாய்) சிங்கப்பூரில் இந்த அமைப்பிற்கும் இந்தியாவிற்கும் இடையே நடைபெற உள்ளது.

இந்த வார இறுதியில் ஆசியன் அமைப்பு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே உடன்பாடு ஏற்படுவதில் உள்ள பிரச்சனைகளை களைவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர் மட்ட குழு சிங்கப்பூருக்கு செல்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் ஆசிய அமைப்பு நாடுகளின் தலைவர்களுடன் உடன்பாடு காண்பதிற்கான பேச்சுவார்த்தையை நடத்துவார்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல் நாத் ஆசியன் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளான மலேசியா, வியட்நாம், இன்தோனிஷியா, புருனே ஆகிய நாட்டு வர்த்தக அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார். இந்த பேச்சுவார்த்தையின் போது ஆசியன் அமைப்பு நாடுகள் விவசாய விளைபொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளிக்கும் முடிவு தெரிவிக்கப்படும்.

ஆசியான் அமைப்பின் 13வது வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்று கொண்டுள்ளது. இதில் ஆசியன் நாட்டு தலைவர்கள் 2015 ஆம் ஆண்டில் ஆசியன் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக உடன்படிக்கை ஏற்படுத்துவதற்கு முன் மாதிரி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள்.

இந்தியாவிற்கும் தென் கிழக்கு ஆசிய கூட்டமைப்பில் (ஆசியான்) உள்ள நாடுகளுக்கும் இடையே 2006-07 ஆம் ஆண்டில் 3000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு இரு தரப்பு வர்த்தகம் நடைபெற்றது. ஆசியான் அமைப்பில் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.






















வெப்துனியாவைப் படிக்கவும்