ஈரோடு, கரூர், சேலத்தில் உயர் நெசவு பூங்கா

Webdunia

வியாழன், 25 அக்டோபர் 2007 (09:31 IST)
ஈரோடு, கரூர், சேலம் பகுதிகளில் உயர்தொழில் நுட்ப நெசவு பூங்கா அமைத்து ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த மத்திய ஜவுளி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என பெடக்ஸில் தலைவர் மதிவாணன் கூறினார்.

இந்தியாவில் ஜவுளி துணி வகைகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் கோடிக்கு மேல் அந்நியசெலாவணி கிடைக்கிறது.

உலகளவில் ஜவுளி ஏற்றுமதியில் சீனா முதலிடத்தையும், இந்தோனேஷியா இரண்டாம் இடத்தையும், இந்தியா 35வது இடத்தையும் பெற்றுள்ளது. பிற நாடுகளுடன் போட்டி போடும் அளவில் நாட்டில் ஜவுளி உற்பத்தியை அதிகரிப்பதுடன் ஏற்றுமதிக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே "டஃப்' திட்டத்தின் கீழ் ரூ. 500 கோடி நிதியை 1999ல் ஒதுக்கியது. தற்போது போதுமான அளவு நிதி ஆதாரம் உள்ளதால் தமிழகத்தில் ஈரோடு, கரூர், சேலம் ஆகிய மூன்று இடங்களில் உயர் தொழில் நுட்ப நெசவு பூங்கா அமைக்க மத்திய ஜவுளி அமைச்சகம் முடிவு செய்தது.

கரூரில் வீட்டு உபயோகத்துக்கு தேவைப்படும் துணி வகைகளையும் ஈரோட்டில் ஆயத்த ஆடை துணி பதனிடுதல் மற்றும் சாயமேற்றவும் சேலத்தில் ஆயத்த ஆடை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தலா 100 ஏக்கர் நிலப்பரப்பில் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமையவுள்ளது. அதில், தொழிலாளர் தங்கும் விடுதி, பயிற்சி மையம், பன்னாட்டு வர்த்தக மையம், நிரந்தர கண்காட்சியகம், ூலகம் உட்பட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இருக்கும்.

ஏற்கனவே, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா செயல்பட உள்ளது. மற்றொரு உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவுக்காக ஈரோடு அருகே பெருந்துறையில் ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. பூங்காவில் வீவிங், சைஸிங், வார்ப்பிங், கார்மென்ட் மற்றும் பயிற்சி மையம், பெண் தொழிலாளர்கள் தங்கி பணி புரிய விடுதி மற்றும் உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி வசதி குறித்த தகவல் வழங்கும் வசதி ஆகியவை அமைக்கப்படும்.

மொத்தம் ரூ.128 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பல்லடம், திருப்பூர் மற்றும் சோமனூரில் ஏற்கெனவே உயர்தொழில் நுட்ப ஜவுளி பூங்கா செயல்படுகிறது. கரூர், சேலத்தில் உயர்தொழில் நுட்ப நெசவு பூங்கா அமைப்பதன் மூலம் ஜவுளி உற்பத்தியில் அனைத்து வகையிலும் முன்னணியில் உள்ள ஈரோடு மேலும் வளம் பெறும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஐந்து ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து சேலம், கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. பின்னர்

பெடக்ஸில் தலைவர் மதிவாணன் கூறியதாவது: நாட்டில் பிற நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்த மத்திய ஜவுளி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதற்காக ஈரோடு, சேலம், கரூரில் உயர்தொழில் நுட்ப நெசவு பூங்கா அமைக்க கூறியுள்ளது. போதுமான நிதி ஆதாரங்களை மத்திய அரசு வழங்குகிறது. பிற நாடுகளில் இருந்து வர்த்தகர்கள் வந்து செல்லும் வகையில், வாகனங்கள் எளிதாக வந்து செல்ல வசதியான இடத்தில் உயர்தொழில் நுட்ப நெசவு பூங்கா அமையும்.

உற்பத்தியாளர்களுக்கு நிரந்தர ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும். ஈரோடு, சேலம், கரூர், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து உற்பத்தியையும், ஏற்றுமதிமதியை அதிகரிக்க முடியும். வரும் ஏப்ரல் மாதத்துக்குள் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்