மென்பொருள், சேவைகள் துறை வருவாய் உயரும்!

வியாழன், 10 ஜூலை 2008 (12:02 IST)
புது டெல்லி: இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப மென்பொருள் மற்றும் சேவைகள் துறை வருவாய் 2008- 09 ஆம் ஆண்டுகளில் 21 முதல் 24 விழு‌க்காடு வரை உயர்ந்து 62- 64 பில்லியன் டாலர்களைத் தொடும் என்று நாஸ்காம் கூறியுள்ளது.

2009 நிதியாண்டு வருவாய் இலக்கில் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 50 பில்லியன் டாலர்கள் பங்களிப்பு செய்யும் என்றும் உள்நாட்டு வருவாய் 13 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் நடப்பு ஆண்டில் 70 சதவீத செலவுகள் ஏற்கனவே உள்ள திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பணித்திட்ட‌ங்களுக்காக 30 விழுக்காடு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய பணித் திட்டங்களுக்கான முடிவுகளை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களால் அவை தாமதமாகின்றன என்று நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியி‌ல் இருந்தாலும், 2008-ஆம் ஆண்டு இரண்டாம் அரையாண்டு முதல் அங்கு தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்திய தகவல் தொழில் நுட்பத்துறை பயனடையும் என்று கூறியுள்ளார்.

2007- 08ஆம் ஆண்டில் மென்பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 29 விழுக்காடு வளர்ச்சி பெற்று 40.4 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டித்தந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்