தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ₹ அடையாளத்தை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ரூ என்று அடையாளம் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் ₹ என்ற சின்னத்தில் இருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று தி.மு.க., அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. தி.மு.க., அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில், அதை திசை திருப்பும் நோக்குடன் இத்தகைய நாடகங்களை தி.மு.க., அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
எதையாவது செய்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும். எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை தி.மு.க., மறந்து விடுகிறது. ₹ அடையாளம் நேற்றோ, அதற்கு முன்நாளோ வெளியிடப்பட்டது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் 2010ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி தி.மு.க., அங்கம் வகித்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் வெளியிடப்பட்டது. அப்போது அதை தி.மு.க., ஆதரித்தது.
₹ அடையாளத்தை வடிவமைத்தவர் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். அந்த அடையாளத்தை வடிவமைத்ததற்காக 201ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி உதயகுமாரையும், அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதல்வர் கருணாநிதி, அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினார். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தை தான் தி.மு.க., இப்போது நீக்கியிருக்கிறது.
அவ்வளவு ஏன்? கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ₹.100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை தி.மு.க., அரசு, மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் ₹ அடையாளம் தான் இடம் பெற்றிருந்தது. அதற்கான அந்த நாணயத்தை தி.மு.க., வெறுக்கவில்லை. மாறாக, ரூ.4,470 விலை கொண்ட நாணயத்தை தி.மு.க., வினரிடமே ரூ.10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பார்த்தது தி.மு.க.,
தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ₹ அடையாளத்தை நீக்கியிருக்கும் தி.மு.க., அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.