காதலியை காரை மோதி கொல்ல முயன்ற காதலன்! – மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (16:36 IST)
மும்பையில் காதலியை காரை மோதி கொல்ல முயன்ற காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அஸ்வஜித் கெய்க்வாட். இவரது தந்தை மராட்டிய மாநில சாலை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார். அஸ்வஜித்தும், பிரியா என்ற பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

சமீபத்தில் அஸ்வஜித் தனது வீட்டில் நடைபெறும் விழா ஒன்றிற்கு பிரியாவை அழைத்துள்ளார். பிரியா அங்கு சென்ற நிலையில் அஸ்வஜித்தின் நடவடிக்கைகள் அவருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சியிலிருந்து அவர் பாதியிலேயே வெளியேறிய நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த அஸ்வஜித்தும், அவரது நண்பர்களும் பிரியாவிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அஸ்வஜித் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாவை கடுமையாக தாக்கியுள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல் தனது காரையும் கொண்டு வந்து பிரியா மீது மோதி காயப்படுத்தியுள்ளார். அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் சாலையில் படுகாயமடைந்து கிடந்த பிரியாவை அப்பகுதியில் சென்ற சிலர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து பிரியா அளித்துள்ள வாக்குமூலத்தின்படி அஸ்வஜித் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காதலியை காதலனே கார் மோதி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்