சகிப்புத்தன்மை பற்றி கருத்து தெரிவித்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறி சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் ஏராளமானோர் தங்கள் விருதுகளை திருப்பித் தந்தனர். மேலும் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.
அந்த கருத்துக்களை, பாஜாக வினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்த கருத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த அமீர்கான் “இந்தியாவில் நடைபெறும் சகிப்புத்தன்மையற்ற செயல்களைப் பார்த்து பயந்த எனது மனைவி, என்னிடம் நாட்டைவிட்டு போய்விடலாமா என்று கேட்டார்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடைபெற்றது. டெல்லியில், அமீர் கானுக்கு எதிராக போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், கான்பூர் நீதிமன்றத்தில், அமீர்கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த புகாரில், சகிப்புத்தன்மை பற்றி பேசி நாட்டை பிளவுப்படுத்த அமீர்கான் முயற்சிக்கிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு வரும் டிசம்பர் 1 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.