மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் பாஜகவில் சேர்ந்தார்

Ilavarasan
சனி, 26 ஏப்ரல் 2014 (13:16 IST)
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி நேற்று பாஜக சேர்ந்தார். இதற்கு மன்மோகன் சிங் குடும்பத்தினர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து தல்ஜீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில், தல்ஜீத் சிங்கின் முடிவு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அது அவருடைய தேர்வு. இந்தியாவை சிறந்த முறையில் உருவாக்க மன்மோகன் சிங் மிகவும் நேர்மையாகப் பணியாற்றினார். அவரின் செயல்பாடுகள் என்களுக்கு பெருமிதத்தை தந்துள்ளது. அவர் எங்களுக்கு பெருமையைத் தேடித் தந்தவர் என்று கூறினர்.
 
மேலும், மன்மோகன் சிங்கின் சகோதரர் மந்தீப் சிங் கூறியபோது, தல்ஜீத் சிங்கின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் இப்போதும் மன்மோகன் சிங்குக்கு எங்கள் ஆதரவைத் தருகிறோம். எனக்கும் கூட பாஜகவில் இருந்து சேருமாறு அழைப்பு வந்தது என்றார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் அலுவலகம், கோலிக்கு தனது அரசியல் பாதை குறித்து தேர்ந்தெடுக்க முழு உரிமையும் உள்ளது. அவர் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பிரதமர் குடும்பம் இந்த நடவடிக்கையை ஆச்சரியத்துடன் பார்க்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது அவருக்கே தெரியும் என்று கூறியுள்ளது.